சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்காமல் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளை பணியமர்த்த வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் செய்வதாக நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 29ம் தேதி போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை வேலைக்கு எடுப்பதாக கூறி தகவல் வெளியானது. இதன் காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஒப்பந்த முறையில் ஆட்களை எடுப்பது நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்ததை ஏற்று தொழிற்சங்கத்தினர் பணிக்கு திரும்பினர். இதனிடையே, தொழிற்சங்கத்தினருடன் கடந்த 31ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தநிலையில் வரும் 9ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4வது கட்டமாக நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச வேண்டும் என சி.ஐ.டி.யு., தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.