சென்னை: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 1-1-2024 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வருகிற 27ம் தேதி வெளியிட உள்ளது. வருகிற 27ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும் – திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நவம்பர் 4ம் தேதி, 5ம் தேதி, நவம்பர் 18ம் தேதி, நவம்பர் 19ம் தேதி ஆகிய 4 நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும். இதன் அடிப்படையில் 2024 ஜனவரி 1ம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும்- வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும்-புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்; தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணையின்படி, சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கும் நாட்களில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊர்க்கிளை, வார்டு செயலாளர்-நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் (பிஎல்ஏ-2) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட கொள்ள வேண்டும். மாவட்ட, மாநகர செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் திமுக அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.