வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள சர்புத்ரியம்மன் சமேத ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவ தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் 2 தேர்களில் ஜலகண்ேடஸ்வரர், சர்புத்திரி தாயார் தனித்தனியாக வலம் வந்தனர். தேரோட்டம் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. இதையடுத்து உற்சவமூர்த்திகளை கோயிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர் 2 தேர்களையும் அங்கு அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நிறுத்தி இரும்பு ஷட்டர் போட்டு பூட்டினர்.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென ஜலகண்டேஸ்வரர் சென்றுவந்த தேரின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை அவ்வழியாக சென்ற பக்தர்கள் பார்த்து அருகில் உள்ள தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர். வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் தேரின் வலது மேற்பகுதி உச்சியில் லேசாக கருகியது. தகவலறிந்து வந்தவாசி தெற்கு போலீசார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இன்று காலை தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.