இது பொது இடம் … கண்ணியம் தேவை!
டெல்லியின் மெட்ரோ அது பரபரப்பான கூட்டம் நிரம்பி வழியும் பயணம் அதில் ஒரு இளம் தம்பதி, சுற்றி இருக்கும் பெரியோர்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என யாரையும் சற்றும் மதிக்காமல் நெருக்கமாக இருந்துகொண்டு சில்மிஷங்களும் செய்துகொண்டிருந்துள்ளனர். இதைக் கண்ட மற்றவர்கள் அனைவரும் முகம் சுழிப்போடு விட்டுவிட ஒரு நடுத்தர வயது பெண்மணி நடக்கும் அநியாயத்தைத் தட்டிக்கேட்டு இது பொதுமக்களுக்கான மெட்ரோ இரயில், வீட்டில் அந்தரங்கமாக செய்ய வேண்டியவைகளை இங்கே செய்யக் கூடாது என தட்டிக் கேட்க, அந்த தம்பதி சண்டைக்கு வந்துள்ளனர். ஆனால் சக பயணிகள் அந்தப் பெண்மணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. மேலும் பலரும் தங்களின் பயணத்தின் இடைவேளையில் நடக்கும் பிரச்னைகளையும் பதிவிட்டு வருகிறார்கள். இதிலும் கூட ஒரு சில இளைஞர்கள் உங்களுக்கு எங்கே வலிக்கிது, அது அவர்கள் பெர்சனல் என போர்க்கொடித் தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெர்சனல் எனில் பெர்சனலாக நான்கு சுவற்றுக்குள்தானே நடக்க வேண்டும்.
மீட்பர்!
ஒரு பெண் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்க திடீரென குழந்தை வாயில் வைத்திருந்த ஏதோ ஒன்று தொண்டையில் சிக்கிக் கொண்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக மாறுகிறது. சுற்றி இருக்கும் அத்தனைப் பேரும் சூழ்ந்து குழந்தையைக் காப்பாற்ற முயற்சிக்க, திடீரென அங்கே வரும் ஒரு பெண், குழந்தையைத் தூக்கி, நெஞ்சுப் பகுதியில் அழுத்தி குலுக்க குழந்தை கண நேரத்தில் சாதாரண நிலைக்கு மாறிவிடுகிறது. மொத்தக் கூட்டமும் அப்பெண்ணைப் பாராட்டியதோடு இந்த வீடியோவிற்குக் கீழேயும் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.