Friday, June 13, 2025
Home செய்திகள் விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 100 சதவீதமாக உயர வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 100 சதவீதமாக உயர வேண்டும்

by Lakshmipathi

*கல்லூரி கனவு ஆய்வு கூட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தல்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 100 சதவீதமாக அமைந்திடும் வகையில் அனைத்து கல்லூரி முதல்வர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷேக்அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில் ‘கல்லூரிக் கனவு’ திட்டத்தின்கீழ், உயர்கல்வியில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில், ‘நான் முதல்வன் – உயர்கல்வி வழிகாட்டி” திட்டத்தின் கீழ், கல்லூரிக் கனவு எனும் நிகழ்ச்சியானது விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி, கா.குப்பம் அரசு பொறியியல் கல்லூரி, திண்டிவனம் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மற்றும் செஞ்சி ரங்கபூபதி கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையால் அடையாளம் காணப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்த 5,458 மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ப்பதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில், கலந்துகொண்ட மாணவர்களை உயர்கல்வி கற்பதற்கு கல்லூரிகளில் இடம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும், கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்ததுடன், அம்மாணவர்களை நேரில் கண்டறிந்து, அம்மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கு உயர்கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையினை உறுதிப்படுத்த வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியில் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்ததுடன், கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி படித்திடும் வகையில் கல்லூரிகளில் சேருவதற்கு தேவையான இடங்களை வழங்குவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன் விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 100 சதவீதமாக அமைந்திடும் வகையில் அனைத்து கல்லூரி முதல்வர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் கூறினார். இதில் திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநர் நடராஜன், அனைத்து கல்லூரி முதல்வர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi