சென்னை: விஜயவாடா- திருப்பதி-காட்பாடி-பெங்களுரு இடையே புதிய வந்தே பாரத் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது, இதில் பதினாறு பெட்டிகள் கொண்ட 15 ரயில்கள், இருபது பெட்டிகள் கொண்ட 8 ரயில்கள் மற்றும் எட்டு பெட்டிகள் கொண்ட 43 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும், ஒரு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதாவது, விஜயவாடாவிலிருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோஸ்தா, ராயலசீமா பகுதிகளை இணைக்கும் வகையில் விஜயவாடாவிலிருந்து பெங்களூரு வரை இயக்கப்பட உள்ளது. தற்போது விஜயவாடாவிலிருந்து பெங்களூரு செல்ல குறைந்தது 12 முதல் 16 மணி நேரம் வரை ஆகிறது. புதிய வந்தே பாரத் ரயிலால் இந்த நேரம் 9 மணி நேரமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 3 மணி நேரம் மிச்சமாகும்.
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கும் இந்த ரயில் சேவை மிக உதவியாக இருக்கும். குறிப்பாக திருமலை பக்தர்களுக்கு குண்டூர், அமராவதி, விஜயவாடாவிலிருந்து திருப்பதிக்கு 5 மணி நேரத்தில் செல்லலாம். இந்த வந்தே பாரத்துக்கு இரண்டு வழித்தடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனந்தபூர் வழித்தடம்: விஜயவாடா குண்டூர் நந்தியால் குண்டக்கல் அனந்தபூர் இந்துப்பூர் பெங்களூரு. இதனால் அமராவதிக்கும் இணைப்பு கிடைக்கும். திருப்பதி வழித்தடம் (முக்கிய பரிந்துரை): விஜயவாடா தெனாலி ஓங்கோல் நெல்லூர் திருப்பதி சித்தூர் காட்பாடி ஜோலார்பேட்டை கிருஷ்ணராஜபுரம் பெங்களூரு.
இந்த வழித்தடத்துக்கு பயணிகள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகமாக இருக்கும். மேலும், இந்த வழித்தடத்தில் திருப்பதி, சித்தூர் போன்ற ஊர்களில் கோயில் தலங்கள் இருப்பதால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் திருப்பதி வழித்தடம்தான் இறுதி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ரயில் விஜயவாடாவிலிருந்து காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு தெனாலி 5.39, ஓங்கோல் 6.28 நெல்லூர் 7.43, திருப்பதி 9.45, சித்தூர் 10.27, காட்பாடி 11.13, கிருஷ்ணராஜபுரம் 13.38, பெங்களூரு 14.15க்கு வந்தடையும். மறுமார்க்கமாக பெங்களூருவிலிருந்து மதியம் 14.45, புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் 14.58, காட்பாடி 17.23, சித்தூர் 17.49, திருப்பதி 18.55, நெல்லூர் 20.18, ஓங்கோல் 21.29, தெனாலி 22.42, விஜயவாடா 23.45 மணிக்கு வந்தடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.
* கோஸ்தா, ராயலசீமா பகுதிகளை இணைக்கும் வகையில் விஜயவாடாவிலிருந்து பெங்களூரு வரை இயக்கப்பட உள்ளது.