சென்னை: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடுமுழுவதும் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஆவினின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் குடிநீர் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை.
அவ்வாறு செய்யாமல் குடிநீரை பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம். குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.