சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் போதை ஆசாமிகளால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடியிருப்பு பகுதியில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் மர்மநபர்கள், 4 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய நிதி உதவி வழங்க வேண்டும்.