சென்னை: தவெகவின் முதல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நேற்று சென்னை சோழிங்கநல்லூரில் நடந்தது. கூட்டத்தில் தவெகவின் தேர்தல் பிரசார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைப் பொது செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் காணொலி வாயிலாக அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது, ‘‘இந்த காணொலி வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தவெக.வின் சமூக ஊடகப் படைதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள். இனி நீங்கள் யாரும் எனது ரசிகர்கள் மட்டும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இனிமேல் நீங்கள் அனைவரும் நமது கட்சியின் ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’.
அப்படித்தான் உங்கள் அனைவரையும் நான் அழைக்க விரும்புகிறேன். அப்படி அழைப்பது உங்களுக்கு பிடித்திருக்கிறது தானே? நமது தவெக.வின் தொழில்நுட்ப பிரிவு என்றாலே நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு அனைவரும் வேலை பாருங்கள்’’ என்றார். தொண்டர்களை நாகரிகத்துடன் நடந்துகொள்ளும்படி சொல்லிவிட்டு கட்சியின் முதல் தொழில்நுட்ப பிரிவு கூட்டத்திற்கு நேரில் வராமல் காணொலி மூலமாக விஜய் பேசியிருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.