சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2025-26ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக இளநிலை படிப்புகளுகளுக்கு, மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப பதிவு இன்று முதல் (மே 26) ஜூன் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://adm.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) படிப்பில் மொத்தம் 660 இடங்கள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. இவற்றில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் படிப்பில் 45 இடங்கள், பிடெக் படிப்புகளில் 8 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.