சென்னை: சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை, அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Adyar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், நேற்று (01.05.2025) வேளச்சேரி, விஜயாநகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்து வெளிநாட்டு மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.சிவசுப்பிரமணியன், வ/38, த/பெ.கணேசன், எண்.94/7, கரிகாலன் தெரு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை என்பவரை கைது செய்தனர். விசாரணையில் எதிரி சிவசுப்பிரமணியன் அளித்த தகவலின் பேரில் 2.ராஜ்குமார், வ/40, த/பெ.இளங்கோவன், எண்.22/39,பாலமுருகன் தெரு, வியாசர்பாடி, சென்னை என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 74 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் சிவசுப்பிரமணியன் விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும், எதிரி ராஜ்குமாருக்கு சிவசுப்பிரமணியன் மதுபாட்டில்களை சப்ளை செய்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவர் மீதும் விசாரணைக்குப்பின்னர் இன்று (02.05.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.