மூணாறு: மூணாறு அருகே வாகனங்களை வழி மறிக்கும் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறு அருகே சின்னார் வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் விரிகொம்பன் காட்டுயானை நடமாடி வருகிறது. இந்த யானை சாலையில் நின்று கொண்டு வாகனங்களை வழி மறிப்பது, பின் தொடர்ந்து விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் மூணாறுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த யானை அப்பகுதியில் வசிக்கும் விமலன் என்பவரை கடந்த பிப். 7ம் தேதி தாக்கி கொன்றுள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறுக்கு பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை விரிகொம்பன் வழிமறித்தது. மேலும், பைக், கார் போன்ற வாகனங்களை ஆக்ரோஷமாக விரட்டியது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றவுடன் தப்பித்தோம், பிழைத்தோம் என வாகன ஓட்டிகள் வாகனத்தை எடுத்துக் கொண்டு விரைந்து சென்றனர்.