வேதாரண்யம்: வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட பகுதியில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் இரண்டாமிடம் வகிக்கிறது. இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த மாதம் பருவம் தவறி பெய்த பலத்த மழையால் உப்பங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் உப்பு உற்பத்தி துவங்கியது. இதனால் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து உப்பளங்களில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரமாக வெயில் அடித்து வருவதால் உப்பு உற்பத்தி துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உற்பத்தி செய்து சேமித்து வைத்திருந்த உப்பை விற்பனைக்காக வெளியூர்களுக்கு லாரிகளில் அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.
தற்போது ஒரு டன் உப்பு ரூ.2,000 ரூ.2,500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது வெயில் அடித்து உப்பு உற்பத்தி மும்முரமாக நடந்து வந்தாலும் இந்தாண்டு உற்பத்தி இலக்கான 6 லட்சம் இலக்கை எட்டுவது கடினம் தான் என்றனர்.