*பக்தர்கள் அவதி
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயிலுக்கு மலைச்சாலை சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வத்தலக்குண்டு அருகே கோட்டைப்பட்டியில் பிரசித்தி பெற்ற சென்றாய பெருமாள் மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக புரட்டாசி மாதம் மற்றும் விசேஷ காலங்களில் பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும்.
மலையின் மீது அமைந்துள்ள இந்த கோயிலுக்கு செல்ல முன்புபுறம் படிக்கட்டுகள் உள்ளன. மலையின் பின்புறம் சாலை அமைக்கப்பட்டு மலை உச்சிக்கு கார்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் சென்று வந்தன. இதனால் படி ஏற முடியாத வயதான பக்தர்கள் மலையேறி சுவாமியை தரிசித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உரிய பராமரிப்பில்லாததால், மலைச்சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதனால் ஆட்டோக்கள், கார்கள் மலை உச்சிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பக்தர்கள் நலன் கருதி சேதமடைந்த நிலையில் உள்ள மலைச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.