உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ. 2,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்களான கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக் ஆகியோருடன் பல அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், பாஜகவின் மாநில பிரிவுத் தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய அவர்,
வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் - பிரதமர் மோடி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு நான் காசிக்கு வருவது இதுவே முதல் முறை. பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவிப் பொதுமக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
என் மகள்களின் குங்குமத்திற்கு (சிந்தூர்) பழிவாங்குவதாக நான் சபதம் செய்திருந்தேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நாட்டின் மகள்களுக்கு அர்ப்பணிக்கிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் . ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் ருத்ர தாண்டவத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. இந்தியாவை தாக்கியவர்கள் பாதாள உலகத்தில் இருந்தாலும் தப்பிக்க முடியாது.
சிறு விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி தொகை விடுவிப்பு
பிஎம் கிசான் திட்டத்தின் தகுதியான விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 19 தவணைகளாக 3.69 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது. 9.7 கோடி சிறு விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி தொகை விடுக்கப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 20வது தவணத்தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் ரூபாய் விகிதம் 20 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்குச் சக்கர நாற்காலிகள்
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்குச் சக்கர நாற்காலிகள், முன்றுசக்கர வண்டிகள் போன்ற உதவி சாதனங்களை பிரதமர் மோடி வழங்கினார்.


