*சிசிடிவி காட்சி வைரல்
வாணியம்பாடி : வாணியம்பாடியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மொபட்டை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வாணியம்பாடி பஷீராபாத் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் அமீன் அஹமத்(36). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மொபட்டை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
பின்னர், வெளியே வந்து பார்த்தபோது தனது மொபட் காணாமல் போயிருப்பதை கண்டு அமீன் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இளைஞர்கள் 3 பேர் மொபட்டை திருடிச்செல்வது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி நகரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த 3 பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். அதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களை கண்டறிய வேண்டும். திருட்டு வாகனங்களை வாங்குபவர்களையும் தொடர்பில் இருப்பவர்களையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.