Thursday, June 12, 2025
Home செய்திகள் வேன் பாய்ந்து 5 பேர் பலியான சம்பவம் கிணற்றில் இருந்து 37 சவரன் நகை மீட்பு: உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

வேன் பாய்ந்து 5 பேர் பலியான சம்பவம் கிணற்றில் இருந்து 37 சவரன் நகை மீட்பு: உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

by Ranjith

நெல்லை: கிணற்றில் வேன் பாய்ந்து பலியான 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிணற்றில் இருந்து 37 சவரன் நகை மீட்கப்பட்டது. கோவை சங்கிலியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவநாதன் மகன் மோசஸ் (50), அவரது மனைவி வசந்தா (49), மகன் கெர்சோம், அவரது மனைவி சைனி கிருபா, ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின், உறவினர்கள் துடியலூரைச் சேர்ந்த ரவி கோயில்பிச்சை (60), அவரது மனைவி ஹெச்சியா (49), மகள் ஜெரின் எஸ்தர்(23) ஆகிய 8 பேர் நேற்று முன்தினம் காரில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள வெள்ளாளன்விளையில் உள்ள ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக வந்தனர்.

காரை மோசஸ் ஓட்டி வந்தார். சாத்தான்குளம் அருகே மீரான்குளம் பகுதியில் வரும்போது முன்பக்க டயர் வெடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அதே பகுதியில் உள்ள தரைமட்ட கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் மோசஸ் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். மோசஸ் மகன் கெர்சோம், சைனி கிருபா, ஜெரின் எஸ்தர் ஆகிய மூன்று பேர் மீட்கப்பட்டனர்.

இவர்களது உடல் நேற்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தூத்துக்குடி கனிமொழி எம்பி, நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் விபத்தின் போது அவர்கள் காரில் ஒரு பையில் வைத்திருந்த 37 சவரன் நகை தண்ணீரில் மூழ்கியதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி சகதியில் இருந்த 2 ஹேண்ட்பேக்குகளை மீட்டனர். அதில் 37 சவரன் நகை மற்றும் ரூ.7600 இருந்தது. அதை அவர்கள உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi