Friday, June 20, 2025
Home செய்திகள் புளியங்குடியில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பைக் மீது வேன் மோதல்

புளியங்குடியில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பைக் மீது வேன் மோதல்

by Lakshmipathi

*3 பேர் படுகாயம்

புளியங்குடி : புளியங்குடியில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பைக் மீது வேன் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். புளியங்குடி அருகேயுள்ள அரியூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் மதன் கண்ணன் (18). இவர் புளியங்குடியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மதன் கண்ணன், அவரது நண்பர்கள் பெரியதுரை, கருப்பசாமி ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். புளியங்குடி நவாச்சாலை பகுதியில் சென்றபோது புளியங்குடியை சேர்ந்த தங்கராஜ் மகன் சிவமணிகண்டன் (23) என்பவர் ஓட்டி வந்த பைக் மீது நேருக்குநேர் மோதியது.

இதில் மதன் கண்ணன், சிவமணிகண்டன் ஆகிய இருவரும் காயமடைந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த புளியங்குடி கீழபுதூர் சமுத்திரபாண்டி மகன் மதன்குமார் (25) என்பவர் பைக் விபத்தில் காயமடைந்த மதன் கண்ணன், சிவமணிகண்டன் ஆகிய இருவரையும் தனது பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

புளியங்குடி தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது ராஜபாளையத்தில் உள்ள மில் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து சென்றுக் கொண்டிருந்த வேன், எதிர்பாராத விதமாக மதன்குமார் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் மதன்குமார் உள்ளிட்ட 3 பேரும் காயம் அடைந்தனர்.

தகவலறிந்து புளியங்குடி எஸ்ஐ மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். இதில் படுகாயடைந்த மதன் கண்ணன், சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சிவமணிகண்டன், மதன்குமார் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து வேன் டிரைவர் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்த ராஜையா மகன் செந்தில்குமார் (23) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi