Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

₹5 கோடி இழப்பீடு கேட்டு சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு

சென்னை: யூ டியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்து தரப்புக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், துளி கூட உண்மையில்லாத பல பொய்களை கூறி தரக்குறைவாக பேசி உள்ளதாக குற்றம் சாட்டி நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மனுவில், பொதுமக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மனுவுக்கு பதிலளிக்குமாறு நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வக்காலத்து தாக்கல் செய்ய உள்ளதால் அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வக்காலத்து தாக்கல் செய்யவும், பதில்மனு தாக்கல் செய்யவும் 2 வாரம் அவகாசம் வழங்கி விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.