Thursday, May 15, 2025
Home செய்திகள் உருளைக்கிழங்கு தரும் உயரிய லாபம்!

உருளைக்கிழங்கு தரும் உயரிய லாபம்!

by Porselvi

தமிழகத்தில் தனித்த நில அமைப்பு கொண்ட மாவட்டம் கிருஷ்ணகிரி. அதுவும் இந்த மாவட்டத்தின் எல்லைப் பகுதியான ஓசூர் மிகவும் வித்தியாசமான சூழலில் அமைந்திருக்கும். இது மலைப்பிரதேசமா? சமவெளிப் பகுதியா? என்ற சந்தேகம் புதிதாக இந்த ஊருக்கு வருகிறவர்களுக்கு நிச்சயம் எழும். அதோடு நாம் வேறு ஏதாவதொரு பிரதேசத்துக்கு வந்துவிட்டோமா? என்ற ஐயம் கூட எழும். அந்தளவுக்கு இயற்கையும், மக்கள் பேசும் மொழிகளும் நமக்கு ஒரு வினோத உணர்வை ஏற்படுத்தும். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் பல பயிர்கள் இங்கு விளைகின்றன. அதுவும் சில தனித்துவமான பயிர்களாகவும் விளங்குகின்றன. அவற்றில் ஒன்றுதான் உருளைக்கிழங்கு. ஓசூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. பேரிகை என்ற பகுதியும் உருளைக்கிழங்கு சாகுபடிக்கு பெயர் பெற்ற பிரதேசமாக விளங்குகிறது. இந்த ஊரில் தனது 3 ஏக்கர் நிலத்தில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யும் விஜயகுமார் என்ற விவசாயி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நிலம் முழுக்க செடிகள் செழிப்பாக வளர்ந்த நிலையில், கிழங்குகள் திரட்சியாக நிலத்தில் இறங்கி அறுவடைக்கு தயாராக இருந்த ஒருநாளில் விஜயகுமாரைச் சந்தித்தோம்.

“எங்களுக்கு 4 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் 3 ஏக்கரில் உருளைக்கிழங்கு பயிரிட்டு இருக்கிறோம். நாங்கள் பல காலமாக இங்கு உருளைக்கிழங்கு சாகுபடியில் ஈடுபடுகிறோம். உருளைக்கிழங்கு பயிரிட பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்கள் மிகவும் ஏற்ற பருவமாக இருக்கும். நாங்களும் இந்தப் பட்டத்தை நவம்பரில்தான் துவக்கினோம். சரியாக டிசம்பர் கடைசியில் விதைப்பு செய்தோம்’’ என பேச்சைத் தொடங்கிய விஜயகுமார் உருளைக்கிழங்கு சாகுபடி நுட்பங்களை ஒவ்வொன்றாக விளக்கினார்.“நவம்பர் மாதத்தில் டிராக்டர் கொண்டு 4 முறை நன்றாக உழவு செய்வோம். கடைசி உழவின்போது ஒன்றரை ஏக்கருக்கு 2 டிப்பர் லாரி என்ற அளவில் மாடு மற்றும் கோழி எருவைத் தெளிப்போம். முன்பெல்லாம் மாடு கொண்டுதான் உழவு செய்வோம். இப்போது முழுக்க முழுக்க டிராக்டர்தான். டிராக்டரிலேயே பார் எடுத்து விதைப்பும் செய்துவிடுவோம்.அதாவது 2 அடி இடைவெளியில் பார்கள் அமைத்து, அந்த பார்களில் முக்கால் அடிக்கு ஒரு விதை என ஊன்றுவோம். விதைகளை ஒரு அடி ஆழத்தில் ஊன்றுவோம். பார்களுக்கு நடுவே சொட்டுநீர்ப் பாசனக் குழாய்களை அமைப்போம். அதில் இருந்து இரண்டு பக்கமும் உள்ள பார்களுக்கு தண்ணீர் பாசனம் செய்யப்படும். விதைத்தவுடன் உயிர்ப்பாசனம் கொடுத்துவிட்டு, அதன்பிறகு ஒருநாள் விட்டு ஒரு நாள் என பாசனம் செய்வோம். 15 நாட்களில் விதைகளில் இருந்து செடிகள் முளைத்து வளர ஆரம்பிக்கும். 20வது நாளில் 2 மூட்டை டிஏபி, 1 மூட்டை பொட்டாஷ், 1 மூட்டை அம்மோனியம் சல்பேட் ஆகிய உரங்களைக் கலந்து செடிகளைச் சுற்றி இடுவோம். உரமிட்ட பிறகு நீர் பாய்ச்சுவோம். இந்த மருந்துகளை மாதம் ஒருமுறை இடுவோம்.

உரமிட்ட பிறகு 10 நாட்கள் கழித்து அல்ட்ராபெட், கர்ஜெட் ஆகிய மருந்துகளை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஸ்பிரே செய்வோம். இந்த மருந்துகளை வேளாண் துறை அலுவலர்கள் பரிந்துரையின்பேரில் தெளிப்போம். இந்த மருந்துகளைத் தெளிப்பதால் புழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, செடிகள் நன்றாக வளரும். காற்று வீசுவதைப் பொருத்து உருளைக்கிழங்கு செடிகளில் புழுக்கள் அதிகளவில் வரும். அதைக் கட்டுப்படுத்த மேற்கண்ட மருந்துகளை மாதம் ஒருமுறை தெளிப்பது அவசியம். புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருந்தால் 20 நாட்களுக்கு ஒருமுறை மருந்தடிக்கலாம். உருளைக்கிழங்குகளை 3 மாதத்தில் அறுவடை செய்துவிடலாம். இதை 3 மாதங்களில் சரியான காலகட்டத்தில் அறுவடை செய்துவிட வேண்டும். அதிக நாட்கள் வைத்திருந்தால் அறுவடை எளிதாக இருக்காது. புழுக்கள் அதிகரித்து மகசூல் பாதிக்கும். கிழங்குகளும் சாப்பிடத் தகுந்தது போல் இருக்காது. இதனால் நாம் விதை ஊன்றும் தேதியை குறித்து வைத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல் அறுவடை செய்ய வேண்டும். 3 மாதம் ஆகிவிட்டால் அதிகபட்சம் 1 வாரம் வரை விட்டு வைக்கலாம். அதற்கு மேல் விடக்கூடாது.நாங்கள் டிசம்பர் மாத இறுதியில் விதைப்பு செய்ததால் தற்போது அறுவடைப் பருவத்திற்கு வந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அறுவடைப் பணிகளைத் துவக்கி விடுவோம். நன்றாக பராமரிப்பு செய்தால் ஏக்கருக்கு 250 முதல் 300 மூட்டை வரை மகசூல் எடுக்கலாம். ஒரு மூட்டை என்பது 50 கிலோ எடை கொண்டது. நாங்கள் சூலகிரி தோட்டக்கலைத்துறை அதிகாரி கோவிந்தராஜ் ஆலோசனையின் பேரில் நல்ல முறையில் தோட்டத்தைப் பராமரித்ததால் ஏக்கருக்கு 300 – 350 மூட்டை மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 3 ஏக்கரிலும் சேர்த்து எப்படியும் ஆயிரம் மூட்டை மகசூல் கிடைக்கும். ஒரு மூட்டை உருளைக்கிழங்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை விலை போகும். சராசரியாக ரூ.1000 விலை கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு நல்ல லாபம். தற்போதைய நிலவரப்படி ரூ.700 என விலை கிடைக்கிறது. 3 ஏக்கரில் எங்களுக்கு 900 மூட்டை மகசூல் கிடைத்து தற்போதைய விலை நிலவரப்படி பார்த்தாலும் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் வருமானம் கிடைக்கும். ஏக்கருக்கு எப்படியும் 1 லட்சம் செலவாகும். 3 ஏக்கருக்கும் சேர்த்து 3 லட்சம் செலவு போக ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் லாபம் கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
விஜயகுமார் – 86102 15558.

*ஓசூரின் சூளகிரி வட்டாரத்தில் விளையும் உருளைக்கிழங்குகள் சென்னை கோயம்பேடு, கோவை மேட்டுப்பாளையம் போன்ற மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்கு அதிகளவில் உருளைக்கிழங்கு விளைவதால் விவசாயிகள் ஒன்றுசேர்ந்து வாகனங்களில் மகசூலை எடுத்துச்சென்று விற்பனையில் ஈடுபடுகிறார்கள். அங்கு அவர்களுக்கு உரிய தொகை உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

*சூளகிரி வட்டாரத்தில் உருளைக்கிழங்கு போலவே கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களும் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. கேரட்களை சுத்தம் செய்ய ஆங்காங்கே சுத்தப்படுத்தும் மையங்களும் இயங்கி வருகின்றன.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi