சென்னை: மிக்ஜம்’ புயல் பாதிப்பு, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினர். சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ‘மிக்ஜம்’ புயல் தமிழக வடமாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது.
புயல் கரையை கடந்து மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். கனமழையால் பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளை செய்யவுள்ளது. இந்நிலையில், மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வுக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது புயல் வெள்ள பாதிப்பு சேத விவரங்கள் குறித்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
அதன்பின்னர் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும், அதை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் வீடியோ காட்சிகள் மூலம் கட்டப்பட்டது. இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டி.ஜி.பி. சங்கர் ஜிவால், முப்படை அதிகாரிகள், அனைத்து துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.