டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னதாக நிர்வாக எல்லைகளில் மாற்றங்களை இறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2020ம் ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனிடையே சாதிவாரி கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் கணக்கெடுக்கும் பணிகள் 2 கட்டங்களாக நடைபெறும் என்று ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்தது.
அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல்தாக்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கும் என்றும், 2ம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் 2027 மார்ச் 1ம் தேதி தொங்கும் என்றும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எல்லைகள் நிர்ணயம் செய்வது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தலைமை பதிவாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் நிர்வாக எல்லைகளின் மாற்றங்களை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் இறுதி செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 1.30 லட்சம் அதிகாரிகள் உள்பட சுமார் 34 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் காகித பயன்பாடு இல்லாமல் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்களிடம் தகவல்களை பெறுவார்கள். மேலும் பொதுமக்கள் இணையதளம் மூலம் சுயகணக்கெடுப்பு செய்யும் வசதியையும் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து முடிந்தவுடன் தொகுதி மறுவரையரை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.