சென்னை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் நிதியை தராமல், ஆணவத்துடன் பேசும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியை தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களை பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா? புதிய கல்விக் கொள்கை (NEP), மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்கு கடிதம் எழுதியது நீங்கள்தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம். உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு அல்ல. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.