Sunday, March 23, 2025
Home » முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடும் அழுத்தத்திற்கு பணிந்தார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா: தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது என்கிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடும் அழுத்தத்திற்கு பணிந்தார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா: தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது என்கிறார்

by MuthuKumar

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில் மறுசீரமைப்பில் தொகுதிகள் குறைக்கப்படாது என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஆனாலும் தமிழகத்தில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசும், திமுகவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் தற்போது 39 தொகுதிகள் உள்ளன. மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள தொகுதிகளை மறு சீரமைப்பு செய்யும்போது 8 தொகுதிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் மட்டும் தொகுதிகள் அதிகரிக்க முடிவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் வெளியானதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக கடும் கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதோடு அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதித்தார். மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் வருகிற 5ம் தேதி கூட்டியுள்ளார்.

தமிழகத்தில் தொகுதிகள் மறு சீரமைப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. போராட்டங்களையும் அறிவித்து வருகின்றனர். இது ஒன்றிய அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்தநிலையில், கோவைக்கு நேற்று வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் தொகுதிகள் குறைக்கப்படாது என்று அறிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கொடுத்த நெருக்கடி மற்றும் அதிரடி நடவடிக்கைகளால் தொகுதிகள் குறைக்கப்படாது என்று அறிவித்துள்ளது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் வட மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவ்வாறு செய்தாலும் நமக்கு பாதிப்புத்தான்.

இதனால், தற்போதைய நிலை தொடர அனைத்து நடவடிக்கைகளையும் திமுக எடுத்து வருகிறது. இந்தநிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:
இப்போது விவாதத்திற்கு எடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாகப் புதியதொரு மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மக்கள் தொகை அடிப்படையிலே தொகுதிகள் எண்ணிக்கை மறுசீரமைப்பு செய்யப்படும் என்பதையொட்டி, தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதில் 1971ம் ஆண்டு அரசியல் சட்டத்தின்படி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் வந்தபோது, அதற்காக நாடாளுமன்றத்தில் தனி சட்டத் திருத்தம் இயற்றி, தள்ளி வைத்தது. அப்போது இருந்த ஒன்றிய அரசு மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவித்தது.

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்தியதன் காரணமாக, வடமாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் சமமற்ற நிலை நிலவுகின்றது. அதனால் தொகுதி மறுசீரமைப்பு 25 ஆண்டு தள்ளி வைக்கலாம் என்று தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு 2004ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அந்த முடிவை ஏற்றுக் கொண்டு, மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தான் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி தள்ளி வைத்தது. இதற்கு மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு மறுசீரமைப்பு செய்ய முடியாது என்பதை நாடாளுமன்றம் ஒப்புக்கொண்டதாகத் தான் பொருள் கொள்ள வேண்டும்.

இப்போது அப்படிப்பட்ட எந்த நிபந்தனைகளும் இல்லாத நேரத்தில், மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை செம்மையாக நிறைவேற்றி இருக்கிற தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் ஜனநாயகரீதியாக தங்களின் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இழக்கும் என்பதை உணர்ந்த முதல்வர், அவ்வாறு நடக்கக் கூடாது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

1971ல் என்ன நிலைப்பாட்டை எடுத்தோமோ, அதுதான் தொடர வேண்டும் என கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்திற்குப்பதில் அளிக்கிற வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் இன்றைக்கு பேசுகிற போது விகிதாசார அடிப்படையில் தான் மறுசீரமைப்பு அமையும், அப்படி விகிதாசார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதி கூட குறையாது என இந்தியில் அறிவித்து இருக்கிறார். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் (pro-rata) என சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த (pro-rata) என்பது இப்போது இருக்கும் தொகுதிகளின் அடிப்படையில் உயருமா, அல்லது மக்கள் தொகை அடிப்படையில் உயருமா என்பதற்கு, எந்த பதிலும் இல்லை.

அந்த குழப்பதைத் தீர்ப்பதாக எண்ணிக் கொண்டு அண்ணாமலை திடீரென நாடாளுமன்றத் தொகுதிகளின் விகித அடிப்படையில் எண்ணிக்கை உயரும் என்று உறுதியாக தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு உள்துறை அமைச்சர் சொல்லவில்லை, உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை புதியதாக விளக்கம் கூறியுள்ளார். இந்த கருத்து தவறு. எனவேதான், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டு மக்கள் உடன்பாடு அல்ல என்பதை முதல்வர் தெள்ள தெளிவாகக் கடிதம் எழுதியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

1971ல் எடுக்கப்பட்ட சென்செஸ் அடிப்படையில் இப்போது இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அப்படியே உயர வேண்டும். 848 இருக்கைகளை நாடாளுமன்றத்தில் போட்டுள்ளனர், இதில் மக்கள் தொகை அடிப்படை போனால் தமிழ்நாட்டுக்கான எண்ணிக்கை குறையும். (pro-rata) அடிப்படையில் போனாலும் எண்ணிக்கை குறையும்.

எனவே 1971ல் என்ன சொன்னார்களோ, அதன் அடிப்படையில் இப்போது இருக்கிற 39 தொகுதி எண்ணிக்கையை pro-rata-வாக எல்லோருக்கும் உயர்த்தினால் எங்களுக்கும் உயர்த்த வேண்டும். மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என சொன்னது ஒன்றிய அரசாங்கம். அதைச் செய்த எங்களுக்கு மட்டும் ஏன் தண்டனை? என்கிற கேள்வி எழுகின்றது. மக்கள் தொகையை கட்டுபடுத்தியிருக்கிறோம். திட்டங்கள் மூலம் முன்னேறி இருக்கிறோம். தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வந்துள்ளது.

இதற்காக நமது பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டால், அது தண்டனை அல்லவா?. தமிழகத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதால், அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், நமது குரல் நெறிக்கப்படும். தமிழ்நாட்டிற்கு குறையாது, மற்ற மாநிலங்களுக்கு கூடினால் பிரச்சனை தானே.

புதிய நாடாளுமன்றத்தை திறக்கும்போது இருக்கைகள் 848 அதிகமாக்கப்படும் என தெரிவித்து இருந்தனர். தமிழ்நாட்டு உணர்வு எதிரான போக்கு பாஜகவுக்கு இருக்கிறது. ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே இந்தியா என்ற கருத்து தமிழ்நாட்டிற்கும் மாநிலங்களுக்கும் எதிரான அரசியல் போக்குதான். இவ்வாறான அரசியலை பாஜக வைத்து கொண்டு, நாங்கள் தனியாக இருக்கோம் என்றால் என்ன அர்த்தம். பாஜக, எதனையும் வெளிப்படையாகச் சொல்வதில்லை, அவர்கள் அரசியல் நேர்மையற்றவர்கள். அதனால் தான் பாஜகவை நம்ப முடியாது என்று சொல்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

You may also like

Leave a Comment

three × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi