புதுடெல்லி: ஒன்றிய அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்களில் பணி நியமனம் செய்ப்பட்ட 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,
“தேசத்தை நிர்மாணிப்பதில் இளைஞர்கள் தீவிரமாக பங்களிக்கும்போது நாடு விரைவான வளர்ச்சியை எட்டுவதுடன், உலக அரங்கில் அங்கீகாரத்தையும் பெறுகிறது. நாட்டிலுள்ள லட்சக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், சிறு தொழில் முனைவோர்களுக்கும் ஆதரவளிப்பதுடன், நாடு முழுவதும் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது இளைஞர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளுக்கான நேரம்” என தெரிவித்தார்.