சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை எனக் கூறி கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க முடியவில்லை. 2021 முதல் 2023ம் ஆண்டு வரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்காத போதிலும் மாநிலத்தின் பங்கு சதவீத நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒன்றிய அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 25 சதவீத ஏழை மாணவர்களின் இட ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நீதிபதிகள் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும்.
சமக்ரா சிக்ஷா திட்டம் என்பது புதிய கல்விக் கொள்கை-2020ஐ அமல்படுத்துவதை போன்றது என்பது உண்மை. கல்வி உரிமைச் சட்டதின் கீழ் உள்ள கடமைகள் சுதந்திரமானவை. கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பொறுப்புகள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றிய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இதை தேசிய கல்விக் கொள்கையுடன் கட்டாய கல்வி சட்டத்தை இணைக்க அவசியம் இல்லை. இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி ஒதுக்க வேண்டும்.
ஆனால், கடந்த 2021 முதல் ஒன்றிய அரசு இந்த நிதியை அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசுக்கு வழங்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. காரணம், தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் கட்டாய கல்வி திட்டத்திற்கான நிதியை மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஒன்றிய அரசும் மாநில அரசும் இந்த திட்டத்திற்கான நிதியை ஒதுக்குவதில் ஏகமனதாக பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், இது சம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
2024-25ம் நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், 3586 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும். இதில் ஒன்றிய அரசின் பங்கு 2151 கோடி ரூபாய். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதி 200 கோடி ரூபாய்க்கும் குறைவானது என்பதால், இந்த நிதியில் ஒன்றிய அரசின் பங்கை ஒதுக்குவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதனால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை சமக்ரா சிக்ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். சட்டப்படி உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும். சட்டத்தில் கூறியுள்ளபடி, உரிய காலகட்டத்தில் இந்த தொகையை தனியார் பள்ளிகளுக்கு எந்த பாரபட்சமும் இன்றி தமிழக அரசு வழங்க வேண்டும். ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை எனக் கூறாமல் தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
* கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றிய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இதை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்க அவசியம் இல்லை.
* கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை சமக்ரா சிக்ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்.