சென்னை: கைவிடப்பட்ட வங்கி கணக்குகளில் உரிமை கோரப்படாத தொகையை உரியவரிடம் சேர்க்க ரிசர்வ் வங்கி தீவிர முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட் தொகையாக சுமார் ரூ.35,000 கோடி இருக்கிறது. வங்கி கணக்கு விவரத்தை குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இறந்தவர்கள், காசோலை புத்தகம், வங்கி புத்தகத்தை தொலைத்து கணக்கை மறந்தவர்கள் என பல பிரிவுகளில் உரிமை கோரப்படாமல் வங்கிகளில் தொகை இருக்கிறது. இவற்றை உரியவரிடம் சேர்க்கும் முயற்சியாக UDGAM என்ற இணையத்தளத்தை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
அதாவது Unclaimed Deposits Gateway to Access Information என்பது அதன் விரிவாக்கம் ஆகும். ஆகஸ்ட் 17-ம் தேதி 7 வங்கிகளுடன் இணைந்து தொடங்கப்பட்ட இணையத்தளத்தில் இதுவரை 30 வங்கிகள் இணைந்து இருக்கின்றன. கைவிடப்பட்ட டெபாசிட் கணக்குகள் பற்றி விவரங்களை வங்கிகள் இந்த இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றன. அதில் தேடுதல் வாய்ப்பு தரப்பட்டுள்ள இடத்தில் கேட்கப்படும் சில விவரங்களை பதிவிட்டு தேடும் வசதி உள்ளது.
உரிமை கோரப்படாத சுமார் ரூ.35,000 கோடியும் 90% அளவிற்கு இந்த இணையதளத்தில் வங்கிகள் பதிவேற்றி இருக்கின்றன. 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இயக்கப்படாத கைவிடப்பட்ட கணக்குகளில் இருந்த தொகையை ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் ஒப்படைத்துள்ளன. முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ள இந்த தொகையை கணக்கை கைவிட்டவர்கள் வாரிசுதாரர்கள் பணத்தை திரும்பப்பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.