தண்டையார்பேட்டை: வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் ராயபுரம் ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில் கலைஞர் நூலகம் மற்றும் கலைஞர் சிலை திறப்பு விழா கேரம் விளையாட்டு மையம் பெண்கள் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வியாசர்பாடி கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து வியாசர்பாடியை சேர்ந்த தந்தையை இழந்து தாய் உதவியுடன் பயிலும் கல்லூரி மாணவி ஒருவர் லேப்டாப் வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருந்தார். அந்த மாணவிக்கு லேப்டாப் வழங்கினார்.
அதை தொடர்ந்து ராயபுரம் எம்சி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் புதிதாக அங்கு நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலையை வடிவமைத்த மீஞ்சூர் சிற்பி தீனதயாளனை பாராட்டினார். அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட செரியன் நகர் பகுதியில் கேரம் அகடமியை தொடங்கி வைத்தார். அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் நூலகத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பின்னர் கொருக்குப்பேட்டை ஆர்.கே.நகர் காவல் நிலையம் அருகே கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார்.மேலும் ஆர்.கே.நகர் ஷூவர்ஸ் அகடமி என்ற பெயரில் பெண்கள் திறன் மேம்பாட்டு மையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலாநிதி விராசாமி எம்பி எம்எல்ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி எபினேசர் ராயபுரம் தொகுதி பொறுப்பாளர் சுபேர்கான் இளைய அருணா பகுதி செயலாளர் செந்தில்குமார் வ.பெ.சுரேஷ் லட்சுமணன் ஜெபதாஸ் பாண்டியன் வழக்கறிஞர் மருது கணேஷ் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் முருகன் ஜெயராமன் நரேந்திரன் மாமன்ற உறுப்பினர் சர்வ ஜெபதாஸ் லயோலா மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.