நெல்லை : உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி பனை விவசாயிகளும் கருப்பட்டி உற்பத்தியாளர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டி உலக புகழ் பெற்றது. உடன்குடி பனை விவசாய சங்கம் மற்றும் உடன்குடி பனை கருப்பட்டி பனங்கற்கண்டு நல அமைப்பினரின் தொடர் முயற்சியால் இங்கு தயாராகும் கருப்பட்டியின் தரத்தை அறிந்திட உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் நபார்டு வங்கியின் மூலம் பனங்கருப்பட்டி நல அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு அரசு புவிசார் குறியீடு வழங்கி பெருமை சேர்த்துள்ளது. இதற்கு உடன்குடி கருப்பட்டி உற்பத்தியாளர்களுக்கு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். உடன்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 7 கிராமங்களில் சுமார் 6000 குடும்பங்கள் பனை விவசாயத்தை நம்பி உள்ளது. தற்போது பருவமழை பொய்த்து போன நிலையில், ஆயிரக்கணக்கான பனை மரங்கள் அழியும் தருவாயில் உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.