Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன். உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது. அதை முடக்கிவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அமர்நாத், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன், சி.திருமாறன், ராஜலட்சுமி பிரகாஷ், அதிமுக சார்பில் கவுதம், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் ஆஜராகினர். அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், சூர்ய மூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஓபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை எனவும் தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமென்று கோரினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சூர்ய மூர்த்தியின் மனு குறித்து 4 வாரங்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் கருத்து கேட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.