புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு தமிழகத்தின் ஆறு எம்பி பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் ஒரு அவசர மனுவை வழங்கி உள்ளார். அதில், ‘‘நடக்க உள்ள மாநிலங்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பெயரில் கையெழுத்திட்ட ஏ மற்றும் பி விண்ணப்பங்களை சமர்ப்பித்தால் அதனை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் நிராகரிக்க வேண்டும்.
அதேப்போன்று யார் ஏ மற்றும் பி விண்ணப்பங்களில் கையெழுத்திட்டு சமர்ப்பித்தாலும் அதனையும் நிராகரிக்க வேண்டும். அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரதான சிவில் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அதனுடைய தீர்ப்பு வராமல் ஏ மற்றும் பி விண்ணப்பத்தில் அதிமுக தரப்பு என்று கூறிக்கொண்டு யாரும் கையெழுத்திட்டு உரிமைக்கோர முடியாது.
குறிப்பாக இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக தான் ஈரோடு இடைத்தேர்தலுக்கு பயன்படுத்த அனுமதி அளித்தது. அதனை மற்ற தேர்தல்களில் பயன்படுத்த முகாந்திரம் இல்லை. ஆனால் அதையும் மீறி சென்ற சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தவறாக வழங்கியது. இது உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிரானதாகும். மேலும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பெயரை பயன்படுத்தி அறிவிக்கும் வேட்பாளர்களை அக்கட்சியின் வேட்பாளராக தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது.
இதனை மீறி தேர்தல் ஆணையம் சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கினால் உச்ச நீதிமன்ற அவ மதிப்பு வழக்கிற்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதேப்போன்று இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை முடிவுக்கும் வரையில் அதிமுக வேட்பாளர்கள் படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவரும் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.