செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த ஓங்கூர் ஆற்றுப்படுகையில் நேற்று விடியற்காலை மர்ம நபர்கள் மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சூனாம்பேடு காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, போலீசாரை கண்டு மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
போலீசார் விரட்டி பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்களில் இரண்டு பேர் ஈசூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(37), மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த புருஷோத்(23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான சூனாம்பேடு பகுதியை சேர்ந்த தேவராஜ் (23) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.