டெல்லி: இனி புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட்கள் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் அதிக சாலை விபத்துகள் நிகழும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. அதிலும் இந்தியாவில் உயிரிழப்புகள் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் இருசக்கர வாகனங்களால் நிகழ்வதாக கூறப்படுகிறது. இதற்கு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற சட்ட விதி உள்ளது. ஆனால் பலர் அதனை பின்பற்றுவதில்லை.
இந்த நிலையில் வரும் ஜனவரி 2026 முதல் புதிதாக வாங்கும் இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களை குறைக்கும் நோக்கில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.