கடலூர்: இருசக்கர வாகனத்தில் சென்று 20 ஆடுகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு, பின்னலூர், சாத்தமங்கலம், மதுராந்தகநல்லூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் தொடர்ச்சியாக ஆடுகள் திருடு போனது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் மூன்று இளைஞர்கள் ஆடுகளை பைக்கில் திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. இதுகுறித்து நடந்த தீவிர விசாரணையில் வடலூரை சேர்ந்த வெங்கடேஷ் பாபு (29), காசிம் (24), கிருஷ்ணகுமார் (22), எழிலரசன் (21) ஆகிய நால்வரும் பைக்கில் சென்று ஆடுகளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் நான்குபேரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று 20க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும், ஆடுகளை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குமாரகுடி, நந்தீஸ்வரமங்கலம் பகுதியில் உள்ள புரோக்கர்கள் மூலம் இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய், 4 செல்போன்கள், ஒரு ஆடு, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.