ஊட்டி : ஊட்டியில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான வைப்புத்தொகை பத்திரங்களை கலெக்டர் வழங்கினார். ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன், குடிசை மாற்று வாரிய வீடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 188 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான வைப்புத்தொைக பத்திரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பதிவு பெற்ற ஒரு உறுப்பினரின் மகனுக்கு கல்வி உதவித்தொகை ரூ.4 ஆயிரத்திற்கான காசோலை, நீலகிரி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் வசூலிக்கப்பட்ட நன்கொடைகள் அதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 1:2 என்ற விகிதத்தில் வழங்கப்படும் இணை மானியத்தொகை ஆகிய ஒருங்கிணைந்த தொகையில் இருந்து 3 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் காசோலை, ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.3.24 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 240க்கான காசோலைைய மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பூர்ணஜித்திடம் வழங்கினார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பழனிசாமி, கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சுரேஷ் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.