*காவல்நிலையம் முற்றுகையால் பரபரப்பு
காட்டுமன்னார்கோவில் : கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த அறந்தாங்கி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19ம் தேதி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு இரவு நண்பர்களுடன் பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வாகனம் பழஞ்சநல்லூர் பகுதியில் பழுதாகி நின்றுள்ளது.
அப்போது பழஞ்சநல்லூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அப்பு (எ) பிரதீஸ் (25), அபூர்வன்(27), கார்த்திக் (25) ஆகியோர் 17 வயது மாணவன் மற்றும் அவரது நண்பர்களிடம் மோதலில் ஈடுபட்டனர். இதில் மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் புகார் அளித்து இரண்டு நாட்கள் ஆகியும் குற்றாவாளிகளை கைது செய்யவில்லை என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் செய்து குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து நேற்று காடுவெட்டி பகுதியில் பதுங்கி இருந்த அபூர்வன், கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பிரதீசை தேடி வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.