சென்னை: டிடிவி தினகரனை திவாலானவராக அறிவிக்கும் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்று, இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாக அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் எம்பி டிடிவி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தாததால், டிடிவி. தினகரனை, திவாலானவர் என்று அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து டிடிவி தினகரன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனி நீதிபதி, நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005ல் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ஃபெரா சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த பிறகும் அபராதத்தை செலுத்தாததால் தினகரனை திவாலானவர் என்று சட்ட ரீதியாக அறிவிக்கும் வகையில் நோட்டீஸ் பிறப்பித்ததில் எந்த தவறும் இல்லை என்றார். அதற்கு டிடிவி.தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், தினகரனுக்கு உள்ள நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸை பிறப்பித்துள்ளனர். இது சட்ட ரீதியாக தவறு என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.