வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரான ஜோ பைடனின் 2 மகன்களின் பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றொரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார். முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன்களான ஹண்டர் பைடன், ஆஷ்லே பைடன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பை உடனடியாக நீக்குவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜனவரியில் ஜோ பைடன் நிர்வாகம், தனது இரண்டு மகன்களுக்கும் மேற்கண்ட பாதுகாப்பு வசதியை வழங்கியது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் செய்த ஹண்டர் பைடனுக்கு 18 முகவர்கள் பாதுகாப்பு அளித்ததாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
ஆஷ்லே பைடனின் பாதுகாப்பிற்காக 13 முகவர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், ஹண்டர் பைடனுக்கு இனிமேல் ரகசிய சேவை பாதுகாப்பு கிடைக்காது என்றும், ஆஷ்லே பைடனும் பாதுகாப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுவார் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். டிரம்பின் முடிவு குறித்து தங்களுக்குத் தெரியும் என்று ரகசிய சேவை செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ரகசிய சேவை இதற்குக் கட்டுப்படும் என்றும், டிரம்பின் முடிவை விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க கூட்டாட்சி சட்டத்தின் கீழ், முன்னாள் அதிபர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் தங்களது வாழ்நாள் முழுவதும் ரகசிய சேவை பாதுகாப்பைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.