ஷாஜஹான்பூர்: உத்தரபிரதேசத்தில் நின்றிருந்த பேருந்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 11 சுற்றுலா பயணிகள் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் குதர் பகுதிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை தாபா ஓட்டல் பகுதியில், சாலையோரமாக சுற்றுலா பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. நேற்றிரவு 11 மணியளவில் நின்றிருந்த பேருந்தின் மீது ‘பாலாஸ்ட்’ கற்கள் லோடு ஏற்றிவந்த டிப்பர் மோதி ஒன்று மோதி விபத்துக்குள்ளனது. அப்போது பேருந்துக்குள் இருந்த சுற்றுலா பயணிகள், 11 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து ஷாஜஹான்பூர் போலீஸ் எஸ்பி அசோக் குமார் மீனா கூறுகையில், ‘நேற்று இரவு 11 மணியளவில், குதார் பகுதியில் செயல்பட்டு வரும் தாபா அருகே சுற்றுலா பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள், உத்தரகாண்ட் மாநிலம் பூர்ணகிரி செல்ல சில மணி நேரம் ஓய்வெடுத்தனர். அவர்கள் அனைவரும் பேருந்துக்குள் அமர்ந்து இருந்தனர். சிலர் மட்டும் தாபாவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு டிப்பர் லாரி ஒன்று நின்றிருந்த பேருந்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 11 சுற்றுலா பயணிகள் இறந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும், உத்தரபிரதேச மாநிலம சீதாபூர் மாவட்டம் கமலாபூர் அடுத்த ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.