Thursday, May 15, 2025
Home செய்திகள் திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசன் சிலை: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விவாதம்

திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசன் சிலை: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விவாதம்

by Karthik Yash

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ் (திமுக) பேசுகையில், ‘‘திருச்சி பாலக்கரை பிரபா திரையரங்கம் அருகில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு நிறுவப்பட்ட சிலையை திறக்க அரசு ஆவன செய்யுமா?’’ என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: ஒரு அமைப்பின் மூலமாக, நடிகர் சங்கத்தின் சார்பாக, ரசிகர் மன்றத்தின் சார்பாக அந்த சிலை வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சிலையைத் திறக்க முடியவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தான் அதற்கு காரணம். நெடுஞ்சாலை, பொதுஇடம் மற்றும் சாலைகளில் சிலைகளை அமைப்பதை கோர்ட் தடை செய்துள்ளது. முதல்வருடன் கலந்து பேசி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் கலந்துபேசி, தக்க இடத்தை தேர்வு செய்து, அந்தச் சிலையை மாற்று இடத்தில் நிறுவி, சிலை திறப்பதற்கான நடவடிக்கைத் துறையின் சார்பில் எடுக்கப்படும்.

இனிகோ இருதயராஜ்: சூப்பர் ஸ்டார் சிவாஜி கணேசன் வாழ்ந்த ஊர், எனது தொகுதியான திருச்சி சங்கிலியாண்டபுரம். அவர் நாடகக் கலையை கற்று நடிக்க ஆரம்பித்த ஊர் திருச்சி. எனவே, அவருடைய புகழைப் பரப்புகிற வகையில் அவருடைய உருவச் சிலையை திருச்சியில் நிறுவ வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் நீண்டகால கனவு. 2018ம் ஆண்டில் தொடர்ந்த வழக்கில், மதுரை ஐகோர்ட் கிளை, அந்த சிலையை நகரின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நிறுவி, மரியாதை செலுத்த வேண்டும் என்று அறுவுறுத்தியிருக்கிறது.

அமைச்சர் சாமிநாதன்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அல்லது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிவாஜி கணேசன் மீது பற்று கொண்டவர்கள். குடும்ப பாசத்தோடு இருவரும் இருந்தவர்கள். அந்த வகையில் திருச்சியில் முறையாக முதல்வரின் அனுமதியைப் பெற்று, மக்கள் சந்திக்கக்கூடிய, அதிகம் பார்க்கக்கூடிய இடமாக தேர்வு செய்து, உள்ளாட்சித் துறை, மாநகராட்சியினுடைய மறுதீர்மானத்தைப் பெற்று, மாவட்ட நிர்வாகத்தினுடைய ஒத்துழைப்போடு உரிய இடத்தில் முறையாக சிலை நிறுவப்படும்.

இனிகோ இருதயராஜ்: இந்த ஆண்டே அந்தச் சிலையை நிறுவ வேண்டும். சிறுபான்மை மக்களின் கோரிக்கையான, சீகன்பால்க் ஐயரின் மணிமண்டபம் கட்ட முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதற்கான பணிகள் தாமதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அமைச்சர் சாமிநாதன்: சீகன் பால்குக்கு மயிலாடுதுறையில் சிலையுடன்கூடிய அரங்கம் அமைக்க கடந்த ஆண்டு ரூ.3 கோடி நிதி ஒதுக்கி அனுமதி தந்திருக்கிறார்கள். அந்த வளாகத்தில் சிலையும் நிறுவப்படவுள்ளது. விரைவில். அந்தப் பகுதியில் சிறப்பாக அந்த அரங்கம் அமையும்.

அமைச்சர் நேரு: சிவாஜி கணேசனின் சிலையை வேறு இடத்தில் நிறுவுவதற்குரிய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு, 2 மாதங்களுக்குள்ளாக, பூங்காக்களில் அவருடைய பெயரை வைத்து, உரிய முறையில் அனுமதி பெற்று, அந்த சிலை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
ஈஸ்வரன் (திருச்செங்கோடு): சுதந்திரப் போராட்ட தியாகி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு அவர் பெயரில் இருக்கிற சென்னை அரசினர் தோட்டத்தில் சிலை அமைக்க வேண்டும்.
அமைச்சர் சாமிநாதன்: முதல்வருடன் கலந்துபேசி தக்க முடிவு எடுக்கப்படும்.

தாரகை கத்பட் (விளவங்கோடு): தாய் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்ததை நினைவுக்கூரும் வகையில் கேரளா-தமிழ்நாடு எல்லையான களியக்காவிளையில் ஒரு நினைவு வளையம் திறக்க அரசு முன்வருமா?.
அமைச்சர் சாமிநாதன்: நிதி நிலைமைக்கேற்ப அது எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்.
பூண்டி கலைவாணன் (திருவாரூர்): சிவாஜி கணேசனின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மண்ணை சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய வேட்டைதிடல் என்ற கிராமம். அவருக்கு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சிலை வைப்பதற்கும் அமைச்சர் முன்வருவாரா? ஏ.டி.பன்னீர்செல்வத்தின் சிலையும் நிறுவப்படுமா?
அமைச்சர் சாமிநாதன்: முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அதுகுறித்து பரிசீலிக்கலாம். ஏ.டி.பன்னீர்செல்வம் சிலை திருச்சியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

* மூடநம்பிக்கையை ஒழிக்க தனி சட்டம்? அமைச்சர் ரகுபதி பதில்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஆயிரம் விளக்கு எம்எல்ஏ டாக்டர் எழிலன் (திமுக) பேசுகையில், “தமிழகத்தில் மூடநம்பிக்கையை ஒழிக்க அரசு தனிச்சட்டம் கொண்டு வருமா?” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், “ஒருவருக்கு நம்பிக்கையாக இருப்பது மற்றொருவருக்கு மூடநம்பிக்கையாக இருக்கிறது. அவரவர் உரிமையில் தலையிடுவது சரியாக இருக்காது, நம்முடைய கொள்கைகளை பின்பற்றலாம். அதற்காக மற்றவர்களின் மத நம்பிக்கையில் தலையிடுவது சரியாக இருக்குமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்” என்றார்.

* முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சில மருத்துவமனைகள் மறுப்பதால் பயனாளிகள் பாதிப்பு: மதிமுக எம்எல்ஏ பேச்சு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார் (மதிமுக) பேசியதாவது: சில மருத்துவமனைகளில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை எடுத்துக் கொள்வதில்லை. சில தனியார் மருத்துவமனைகள் அந்த திட்டத்தை நாங்கள் பார்க்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்ப டுகிறார்கள். இந்த நிலையை போக்க வேண்டும். இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் மருத்துவம் செய்யக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் கூட இங்கு வைத்தியம் செய்ய வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இதுபோன்ற குறை இருப்பதை நீக்கிவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* பேரவையில் இன்று
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி-நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். விவாதத்துக்கு பதில் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi