Saturday, December 2, 2023
Home » போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 25% தீபாவளி போனஸ் தரவேண்டும்: ராமதாஸ்

போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 25% தீபாவளி போனஸ் தரவேண்டும்: ராமதாஸ்

by Lavanya

சென்னை: போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 25% தீபாவளி போனஸ் தரவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, தமிழ்நாட்டில் தீபஒளி திருநாளுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், போக்குவரத்துக்கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை பணியாளர்களுக்கான மிகை ஊதியம் மற்றும் முன்பணம் குறித்து தமிழக அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றமும், கவலையும் அளிக்கிறது. தீபஒளி திருநாளையொட்டி தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படுவது வழக்கம்.

இது தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுகள் நடத்தப்படும். அப்போது தான் மிகை ஊதியத்தின் அளவை கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்மானித்து, குறைந்தது 20 நாட்களுக்கு முன்பாவது தொழிலாளர்களுக்கு வழங்க இயலும். ஆனால், நவம்பர் 12ம் நாள் கொண்டாடப்படும் தீப ஒளிக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அதனால், கடந்த ஆண்டைப் போலவே கடைசி நேரம் வரை தாமதித்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தாமல், 10% மட்டுமே மிகை ஊதியம் வழங்கப்படும் என்று அரசு தன்னிச்சையாக அறிவித்து விடுமோ? என்ற ஐயமும், கவலையும் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 20% மிகை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் மட்டும் கொரோனா காரணமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை காரணம் காட்டி 10% மட்டும் மிகை ஊதியம் வழங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கான மிகை ஊதியம் என்பது அவர்களின் மொத்த ஊதியத்தை கணக்கிட்டு வழங்கப்படுவதில்லை. மாறாக மிகை ஊதியக் கணக்கீட்டுக்கான ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதன் ஆண்டு சராசரியிலிருந்து தான் 20% மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தொகையே மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25% ஆக உயர்த்தி, உடனடியாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?