சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், மற்றும் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உடனடியாக முதல்வரின் உத்தரவின்படி ஒடிசா நேற்று காலை சென்றனர்.
இந்தநிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒடிசா சென்ற தமிழ்நாட்டு குழுவினருடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அமைச்சர் உதயநிதி தலைமையிலான குழுவினர், பாலசோர் அரசு மருத்துவமனைக்கு சென்று, விபத்தினால் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து வந்ததாகவும், ஆனால் அதில் தமிழ்நாட்டைச் நேர்ந்த எவரும் இதுவரை இல்லை என்று தெரிவித்தனர். தற்போதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 70 சடலங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என்று அங்குள்ள அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாகவும் முதல்வரிடம் குழுவினர் தெரிவித்தனர்.