சென்னை: பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டன. இதனால் விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விமானங்களை தரையிறக்கி நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்க வந்த 5 விமானங்கள் நள்ளிரவில் சென்னைக்கு திருப்பப்பட்டன.
அதன்படி, ஹைதராபாதில் இருந்து பெங்களூருக்கு நள்ளிரவு 12.20 மணியளவில் 135 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஹாங்காங்கிலிருந்து பெங்களூருக்கு 296 பயணிகளுடன் சென்ற கேத்தேபசிபிக் ஏர்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 12.50 மணியளவில் நாக்பூரில் இருந்து பெங்களூருக்கு 127 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நேற்று அதிகாலை 1.20 மணியளவில் கோவாவில் இருந்து பெங்களூருக்கு 154 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை 1.55 மணியளவில் பிராங்க்பார்ட்டில் இருந்து பெங்களூருக்கு 327 பயணிகளுடன் சென்ற லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 5 விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கின.
பயணிகள் அனைவரும் விமானங்களிலே அமர வைக்கப்பட்டனர். விமான நிறுவனங்கள் சார்பில் பயணிகளுக்கு குடிநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில், போக்குவரத்து நெரிசல் சீரானதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து அடுத்தடுத்து 5 விமானங்களும் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.