வால்பாறை: வால்பாறையில் கோடை விழா 2ம் நாளான நேற்று சப் கலெக்டர் பிரியங்கா தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி, ஆணையாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர் செந்தில் மற்றும் கவுன்சிலர்கள் முன்னின்று நிகழ்ச்சிகளை நடத்தினர். அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று கோடை விழா நிகழ்ச்சிகளை மழையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பரதநாட்டியம், வளர்ப்பு நாய்கள் கண்காட்சி, காவல்துறை வளர்ப்பு நாய்களின் சாகசம், பட்டிமன்றம், வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினர் வழங்கிய உங்கள் மேடை, மேஜிக் ஷோ, படகு சவாரி, பாரா கிளைடிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அரசு மற்றும் தனியார் துறை அரங்குகளை பொதுமக்கள் கண்டு ரசித்தும், விழிப்புணர்வு அடைந்தும் சென்றனர். தோட்டக்கலைத்துறை அரங்கில் சுற்றுலா பயணிகள் கூட்டம் செல்பி எடுக்க 2ம் நாளாக ஆர்வம் காட்டினர்.3ம் நாளான இன்று காலை முதல் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பரத நாட்டியத்துடன் தொடங்கும் கலை நிகழ்ச்சியில் பழங்குடியினர் இசை, கரகம், ஒயிலாட்டம், ஜிக்காட்டம், போதை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிற்பகல் கோடை விழா நிறைவு நிகழ்ச்சியும், அரசு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.