சென்னை: எதிரிகளால் இறுதிவரை நேரடியாக போரிட்டு வீழ்த்திட முடியாத தீரன் சின்னமலையின் வீரமும் – தியாகமும் என்றைக்கும் நிலைத்திருக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அதன்படி, இன்று தீரன் சின்னமலையின் 269 பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தீரன் சின்னமலை பிறந்தநாளை ஒட்டி கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற கொங்கு மாவட்டங்களில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; விடுதலைப்போரின் வீரமிகு அடையாளம் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் இன்று. சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் நடுவே ஒரு சின்னமலை என்று ஆங்கில ஆதிக்கத்தை குலை நடுங்கச் செய்தவர். எதிரிகளால் இறுதிவரை நேரடியாக போரிட்டு வீழ்த்திட முடியாத தீரன் சின்னமலையின் வீரமும் – தியாகமும் என்றைக்கும் நிலைத்திருக்கும். ஆதிக்கத்தையும் – அடிமைத்தனத்தையும் ஒழிப்பதற்கான உத்வேகத்தை தீரன் சின்னமலையின் வரலாற்றின் வழியே பெறுவோம். வாழ்க அவர் புகழ்! என்று பதிவிட்டுள்ளார்.