திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயில் பெயரை அருணாசலேசுவரர் என்று மாற்றுவதாக கூறுவது வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருவண்ணாமலை கோயிலின் பெயர் படிப்படியாக அருணாசலேசுவரர் திருக்கோயில் என்று மாற்றப் படுவதாகப் பாரிசாலன் என்பவர் பேசும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பதிவில் கூறியதாவது;
இது முற்றிலும் பொய்யான தகவல். திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் அளித்துள்ள விளக்கத்தில், “1940 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜக் காரியதரிசி ம.பாலசுப்பிரமணியன் அவர்களால் எழுதப்பட்ட ‘திருவண்ணாமலை வரலாறு’ என்ற நூலில் இக்கோயிலின் பெயர் ஸ்ரீ அருணாசலேசுவரர் தேவஸ்தானம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. LIGU நூற்றாண்டுகளாகவே திருக்கோயில், பக்தர்கள் அருள்மிகு அண்ணாமலையார் அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆகிய பெயர்களில் அழைத்து வருகின்றனர். கோயில் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.