திருமலை: திருப்பதி நடைபாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 5வது சிறுத்தை நேற்று அதிகாலை கூண்டில் சிக்கியது. இதனால் பக்தர்கள், அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். திருப்பதி யில், கடந்த மாதம் 12ம்தேதி நெல்லூரை சேர்ந்த லட்ஷிதா(6) என்ற சிறுமி பெற்றோருடன் பாத யாத்திரையாக சென்றபோது நரசிம்மசுவாமி கோயில் அருகே சிறுத்தை, லட்ஷிதாவை இழுத்து சென்று கொன்றது. இதனால் வனத்துறையினர் கூண்டு வைத்து அடுத்தடுத்து 3 சிறுத்தைகளை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தைகள் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா வன உயிரியியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடைபாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாடுவது வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதனால் அந்த சிறுத்தையை பிடிக்கும் வரை வனப்பகுதியில் ஆபரேஷன் சிறுத்தை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடைப்பாதையில் 7வது மைல் அருகே சிறுத்தை வந்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் கூண்டு வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை 5வது சிறுத்தையும் கூண்டில் சிக்கியது.
மேலும் 2 சிறுத்தைகள் நடமாட்டம்: திருமலையில் உள்ள ஸ்பெஷல் டைப் காட்டேஜ் பகுதி அருகே உள்ள வனப்பகுதியில் ஒரு சிறுத்தையும், பக்தர்கள் நடந்து வரும் நடைபாதையில் உள்ள வனப்பகுதியில் மற்றொரு சிறுத்தையும் என மேலும் 2 சிறுத்தைகள் நடமாடுவது கண்காணிப்பு கேமராவில் தற்போது பதிவாகி உள்ளது.