Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பதி கோயிலுக்குச் சென்றபோது விபத்து: டிராக்டர் மீது கார் மோதி தனியார் ஊழியர் பரிதாப பலி; மனைவி, மகன் படுகாயம்

திருத்தணி: திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு சென்றபோது, டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த அவரது மனைவி, மகனுக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் சுதாகர் (48). தனியார் நிறுவன ஊழியரான இவர், திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய தனது மனைவி கோதைநாயகி (40), மகன் சுதர்ஷன் (19), மகள் தக்சனா (18) ஆகியோருடன் நேற்று காரில் திருப்பதிக்குச் சென்றார்.

திருத்தணி அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை தனியார் மகளிர் கல்லூரிக்கு அருகில் சென்றபோது, திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிச் சென்ற டிராக்டரும், சுதாகர் ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி காரை ஓட்டிச் சென்ற சுதாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுதர்ஷன், கோதைநாயகி ஆகியோர் படுகாயமடைந்தனர். தக்சனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த, திருத்தணி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுதாகரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருத்தனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி கோயிலுக்குச் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.