திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர், மாடவீதியில் உள்ள ஹயக்ரீவர், வராக சுவாமி கோயில்களில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். மாடவீதியில் உள்ள படிக்கட்டுகளில் பக்தர்களுடன் அமர்ந்து சிறிதுநேரம் பேசினார்.
பின்னர் அங்குள்ள விடுதியில் தங்கினார். இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு வேதமந்திரங்கள் முழங்க ரங்கநாயக்க மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.