ஆந்திரா: திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்கப்பட்டது. திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்கப்பட்டது. சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த மீனா, சந்திரசேகர் தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்திருந்தார். தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நேற்று இரவு தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் சென்னை செல்வதற்காக அதிகாலை 2 மணிக்கு சந்திரசேகர், திருப்பதி பேருந்து நிலையம் வந்துள்ளார்.
அதிகாலை நேரம் என்பதால் கலைப்பில் தூங்கியுள்ளனர். திடீரென விழுத்து பார்க்கையில் அருகில் படுத்து கொண்டிருந்த சந்திரசேகரின் 2 வயது மகன் அருள்முருகனை காணவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர், பேருந்து நிலையம் முழுவதும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுவனை காணவில்லை. இதுகுறித்து திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சோதனை செய்ததில் மர்ம நபர் ஒருவர் சிறுவனை தூக்கி கொண்டு நடந்து செல்வது பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளை வைத்து போலீசார் கடத்தல் நபர் குறித்து விசாரணை செய்து வந்தனர். குழந்தையை போலீசார் தேடிவந்த நிலையில் குழந்தையின் சித்தப்பா ஆட்டோவில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்த குழந்தையின் சித்தப்பா சுதாகர், குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை கடத்தியது சித்தப்பாவா அல்லது வேறு யாராவதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து குழந்தையை மீட்டு திருப்பதி தனிப்படை போலீஸ் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குற்றவாளி குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.